search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக கூட்டணி"

    • பாராளுமன்ற தேர்தலில் புரட்சி பாரதம் கட்சிக்கு எந்த தொகுதியையும் அதிமுக ஒதுக்கவில்லை.
    • 40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி திட்டவட்டமாக கூறினார்

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்

    "திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் தொகுதிகளை விருப்பப் பட்டியலாக அளித்து, அதில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் அவர் கேட்டிருந்தார்.

    ஆனால் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு எந்த தொகுதியையும் அதிமுக ஒதுக்கவில்லை. இதனையடுத்து அதிமுக - புரட்சி பாரதம் கூட்டணி முறியும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடரும் என அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக கூட்டணியில் எங்களுக்கு சீட் வழங்காததால் வருத்தத்தில் இருந்தோம். அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என அதிமுக தலைவர்கள் எங்களை சமாதானம் செய்தனர். பெரும்பாலான தொண்டர்கள் அதிமுகவுடன் தொடரலாம் என கூறியதால் அதில் தொடர முடிவு செய்யப்பட்டது என்றார்.

    40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி திட்டவட்டமாக கூறினார்.

    • விஜயகாந்த் இல்லாமல் தே.மு.தி.க. சந்திக்கும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது.
    • தே.மு.தி.க. விரும்பிய தொகுதிகளை அ.தி.மு.க. வழங்கியுள்ளது.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க. தலைமைக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும், பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணலும் நடந்து வருகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளும் இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு விஜயகாந்த் அறையில் சிறிது நேரம் கலந்தாலோசனை செய்தனர்.

    வருகிற 24-ந்தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. அந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சேர்ந்த அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறோம்.

    அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு எடப்பாடி பழனிசாமி என்னை நேரில் வந்து அழைத்துள்ளார். எனவே நானும், முக்கிய நிர்வாகிகளும் அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறோம்.

    40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அந்த பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்து அன்று முதல் பிரசாரத்தையும் தொடங்க இருக்கிறோம்.

    இந்த கூட்டணி ஒற்றுமையாக கூட்டணி தர்மத்துடன் செயலாற்றி 'நாளை நமதே, நாற்பதும் நமதே' என்று வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு நல்ல புரிதலோடு பயணிக்க இருக்கிறோம்.

    இங்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய 3 தெய்வங்களின் ஆசீர்வாதத்தோடு இந்த கூட்டணி, 2011-ல் அமைந்த வெற்றிக் கூட்டணி போல சரித்திரம் படைக்கும்.

    தே.மு.தி.க.வுக்கு மேல் சபை உறுப்பினர் சீட் உறுதியாகிவிட்டது. வெற்றிலை பாக்கை மாற்றி உறுதி செய்துவிட்டோம். ஆனால் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    மேல்சபை எம்.பி. தேர்தலில் யார் போட்டியிடுவார் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. விருப்ப மனு நேர்காணலை நிறைவு செய்து விட்டு பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளது.
    • அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வராத நிலையில் தே.மு.தி.க.விற்கு கேட்ட தொகுதிகளில் சிலவற்றை கொடுக்கவும் அ.தி.மு.க. தயாராகி விட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுகின்ற நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன. தி.மு.க. தனது கூட்டணி கட்சிக்கு தொகுதிகளை பங்கீடு செய்துவிட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    ஆனால் அ.தி.மு.க. இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் இருந்து வருகிறது. தே.மு.தி.க.வுடன் 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்து உள்ளது. ஆனாலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.

    பா.ம.க.வை தனது பக்கம் இழுக்க அ.தி.மு.க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் பா.ம.க.வுடன் ரகசியமாக பேசி வருகின்றனர்.

    அதே வேளையில் பா.ஜ.க.வும் பா.ம.க.வை தங்கள் பக்கம் இழுக்க ஒருபுறம் பேச்சு நடத்தி வருகிறது.

    இந்த நிலையல் அ.தி.மு.க. விருப்ப மனு நேர்காணலை நிறைவு செய்து விட்டு பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளது. ஒருவேளை பா.ம.க.-பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் நிலை ஏற்பட்டால் தே.மு.தி.க.வை அழைத்து பேசி தொகுதி உடன்பாட்டை இறுதி செய்ய அ.தி.மு.க. தயாராகி விட்டது.


    பா.ம.க.வுடன் கடைசி கட்ட பேச்சுவார்த்தை இன்று நடத்தி விட்டு தொகுதி பங்கீட்டை முடிக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. பா.ம.க.வுடன் பா.ஜனதா இன்று பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட அ.தி.மு.க.வும் தொடர்ந்து அக்கட்சியை இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையில் தே.மு.தி.க.வுடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தையை நாளை (வியாழக்கிழமை) நடத்த அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களாக பா.ம.க.வுடன் ரகசிய பேச்சு நடத்திய அ.தி.மு.க. அதில் முடிவு எட்டாததால் தே.மு.தி.க.வை அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    ஆனால் நாளை மாலை அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் சந்திக்க உள்ளனர். அப்போது தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தே.மு.தி.க. தரப்பில் 7 தொகுதிகளும், ஒரு மேல் சபை எம்.பி.யும் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அ.தி.மு.க. 4 தொகுதிகளை மட்டும் ஒதுக்க முன் வருவதாக தெரிவித்தது. மேல்சபை எம்.பி. கொடுக்க இயலாது என்று தெரிவித்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வராத நிலையில் தே.மு.தி.க.விற்கு கேட்ட தொகுதிகளில் சிலவற்றை கொடுக்கவும் அ.தி.மு.க. தயாராகி விட்டது. அ.தி.மு.க.-தே.மு.தி.க. தொகுதி பங்கீடு நாளை சுமூகமாக நடைபெற்று இறுதியாகக் கூடிய சூழல் நிலவுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது.
    • பாராளுமன்றத் தேர்தல் வெகு விரைவில் வரப்போகிறது.

    திருப்பூர்:

    போதை பொருட்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூரில் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-

    தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது. ஏற்கனவே 2 ஜி ஊழல் வழக்கில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தினர். இப்போது போதை பொருள் விற்பனையால் மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளனர்.

    வெளிநாடுகளில் இருந்து தி.மு.க.வின் அயலக அணி இணைச்செயலாளர் ஒருவர் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை தமிழகத்திற்கு கடத்தி வந்து தமிழக இளைஞர்களுக்கு சப்ளை செய்துள்ளார். 3 ஆண்டு காலத்தில் பல ஆயிரம் கோடி போதை பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்துள்ளார்கள்.

    இதேபோல் தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. இதனை தடுக்க முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் தவறிவிட்டார். இன்று திருப்பூர் மாநகராட்சியில் ஊழல் மலிந்து கிடக்கிறது. 50 சதவீத கமிஷன் கேட்பதால் எந்த ஒரு பணி செய்வதற்கும் ஒப்பந்ததாரர்கள் முன் வரவில்லை.

    தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருவதோடு மக்களின் பிரச்சினைகளை சட்டசபையில் எடுத்து பேசி வருகிறார். ஆனால் அதற்கு தி.மு.க. உரிய பதில் அளிக்க முடியாமல் திணறி வருகிறது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவின் பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக எடப்பாடி பழனிச்சாமி உருவெடுத்து வருகிறார். பாராளுமன்றத் தேர்தல் வெகு விரைவில் வரப்போகிறது. இதில் அ.தி.மு.க. சார்பில் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மண்டலம் முழுவதும் போட்டியிடும் வேட்பாளர்களை எம்ஜிஆர்- ஜெயலலிதா ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என நினைத்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவர் அவர் பேசினார்.

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    "திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் தொகுதிகளை விருப்பப் பட்டியலாக அளித்து, அதில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் கேட்டுள்ளோம்" என்று அவர் கூறியுள்ளார்.

    இன்னமும் அதிமுக எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆனாலும் திருவள்ளூர் எங்களது சொந்த தொகுதி என்பதால் அதை நிச்சயம் கேட்டு வெற்றி பெறுவோம் என்று பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    அரசியலமைப்பு சட்டத்தை வெளிப்படையாக மீறி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். ஒரு மதத்தை மட்டுமே வைத்து அவர் வெளிப்படையாகவே அரசியல் செய்கிறார். ஹிந்து மத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது. நான் கூட ஹிந்து தான் ஆனால் பாஜகவின் மத அரசியலை நான் ஆதரிக்கவில்லை என்று பூவை ஜெகன் மூர்த்தி பேசியுள்ளார்.

    மேலும் "திமுக வெல்லக் கூடாது என்பதுதான் பாஜகவின் ஒரே எண்ணமாக உள்ளது. பாஜக ஜெயிக்காது என பிரதமர் மோடிக்கே தெரியும். அதனால்தான், அதிமுக ஜெயித்தால்கூட பரவாயில்லை என அக்கட்சித் தலைவர்களை புகழ்ந்து பேசியுள்ளார் என்று பூவை ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 4 தொகுதிகளுக்காக போராடி வரும் நிலையில் எங்கள் பக்கம் வந்தால் 5 தொகுதிகள் தர தயார் என்று அ.தி.மு.க. தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
    • பா.ம.க. இருக்கும் அணியில் நாங்கள் இடம்பெற முடியாது என்ற தங்கள் நிலைப்பாட்டை சிறுத்தைகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகள் கேட்கிறது. ஆனால் அதற்கு தி.முக. தரப்பில் இன்னும் இறுதியாக எதுவும் தெரிவிக்காததால் விடுதலை சிறுத்தைகளும் தயக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    அதே நேரம் பா.ம.க.வும் தனது முடிவை அறிவிக்கவில்லை. தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமையும். திமு.க. கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும் என்று கூறி வருகிறார்.

    விடுதலை சிறுத்தைகளை குறி வைத்தே அவர் இவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது.

    விடுதலை சிறுத்தைகளை தங்கள் பக்கம் இழுப்பதற்காக அ.தி.மு.க. முயற்சித்து வருகிறது.

    4 தொகுதிகளுக்காக போராடி வரும் நிலையில் எங்கள் பக்கம் வந்தால் 5 தொகுதிகள் தர தயார் என்று அ.தி.மு.க. தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.


    அப்போது பா.ம.க. இருக்கும் அணியில் நாங்கள் இடம்பெற முடியாது என்ற தங்கள் நிலைப்பாட்டை சிறுத்தைகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பா.ம.க. வரும் என்பது உறுதியாகவில்லை என்று அ.தி.மு.க. தரப்பில் கூறி இருக்கிறார்கள்.

    ஆனாலும் அ.தி.மு.க.வின் 'ஆஃபரை' ஏற்க விடுதலை சிறுத்தைகள் தயக்கம் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் அ.தி.மு.க. 5 இடங்கள் வழங்கினாலும் அது வேட்பாளராகத்தான் இருக்க முடியும். ஆனால் தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கப்படும் இடங்கள் நிச்சயம் எம்.பி.க்கள் ஆகி விடுவார்கள் என்று கட்சி நிர்வாகிகளும் திருமாவளவனிடம் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    எனவே இந்த தேர்தலில் விட்டுவிடுங்கள். பின்னர் பார்க்கலாம் என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    • மேலிடத்தின் அனுமதியுடன் தான் அண்ணாமலை இவ்வாறு செயல்படுவதாக அ.தி.மு.க. தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
    • அண்ணாமலை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஒரு சில சீட்டுகளை கெஞ்சி கேட்கும் நிலையில் இருக்க கூடாது.

    சென்னை:

    பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்று இருந்த அ.தி.மு.க. விலகியது அந்த கூட்டணிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது.

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க.வை விமர்சித்ததும் அண்ணா பற்றி கூறிய கருத்தும் அ.தி.மு.க. தலைமைக்கு பிடிக்கவில்லை. இதுவே கூட்டணி முறிவுக்கான காரணம்.

    அண்ணாமலையின் செயல்பாட்டில் தங்களுக்கு திருப்தியில்லை என்று அ.தி.மு.க. தலைவர்கள் நேரிலேயே டெல்லி தலைவர்களிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே மேலிடத்தின் அனுமதியுடன் தான் அண்ணாமலை இவ்வாறு செயல்படுவதாக அ.தி.மு.க. தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். இதையடுத்து கூட்டணியில் இருந்து விலகினார்கள். இனிமேல் பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்துவிட்டனர்.

    ஆனால் அண்ணாமலை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஒரு சில சீட்டுகளை கெஞ்சி கேட்கும் நிலையில் இருக்க கூடாது. இந்த தேர்தலில் போடும் அடித்தளம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கைகொடுக்கும் என்று கருதுகிறார்.

    அண்ணாமலையின் இந்த முடிவுக்கு கட்சிக்குள் ஆதரவும் இருக்கிறது. அதேநேரம் பலமான கூட்டணி அமைத்தால் தான் சில தொகுதிகளில் ஜெயிக்க முடியும் என்று மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.

    3-வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வரும் டெல்லி தலைவர்கள் அண்ணாமலையின் அக்னி பரீட்சைக்கு சம்மதிப்பார்களா? அல்லது கூட்டணிக்கான முயற்சியை முன்னெடுக்க வலியுறுத்துவார்களா? என்று தெரியவில்லை.

    இந்நிலையில் நாளை (1-ந் தேதி) அண்ணாமலை டெல்லி செல்கிறார். அங்கு மத்திய மந்திரி அமித்ஷா, கட்சி தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது கூட்டணி முறிவுக்கான காரணங்களை விளக்குவார் என்று கூறப்படுகிறது.

    அடுத்த கட்டமாக தமிழகத்தில் கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அமித்ஷா ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வருகிற 3-ந் தேதி (செவ்வாய்) மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் அமைந்தகரை அய்யாவு மகாலில் நடக்கிறது. அன்று மாலையில் கட்சியின் மையக்குழு கூட்டமும் நடக்கிறது.

    டெல்லியின் முடிவுகளை கட்சி நிர்வாகிகளிடம் அண்ணாமலை விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கட்சி நிர்வாகிகளுடன் நேரில் வந்து சி.பா. ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தியுள்ளோம்.
    • சிறப்பான தலைவர் சிறப்பான பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்த பின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நிருபர்களிடம் கரு.நாகராஜன் கூறியதாவது:-

    எங்கள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் வந்து சி.பா. ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தியுள்ளோம்.

    தமிழகத்திற்கு ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை ஒரு பத்திரிக்கையின் வாயிலாக அறிவொளி இயக்கம் நடத்துவதைப் போல் படிக்காத பாமரரையும் படிக்க வைத்த மிகப்பெரிய பெருமை ஆதித்தனாருக்கு உண்டு. அவர் புகழ் என்றென்றும் ஓங்கி உயர வேண்டும் என்றார்.

    கே: அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்ட பின் அண்ணாமலைக்கு கட்சியில் நெருக்கடி இருக்கிறதா?

    ப: சிறப்பான தலைவர் சிறப்பான பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். கூட்டணி முறிவால் அண்ணாமலைக்கு நெருக்கடி இல்லை. தேசிய தலைமை முடிவெடுத்த பின் முடிவு சொல்லப்படும்.

    கே: கூட்டணியில் பிளவு ஏற்பட்ட பின் கூட்டணி தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனரா?

    ப: கட்சித் தலைவர்கள் அவர்களின் கட்சி சார்பில் முடிவெடுக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு. பொறுத்து இருந்து பார்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி.
    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேசி இறுதி முடிவு எடுக்க கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

    திண்டுக்கல்:

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.

    திண்டுக்கல் சீலப்பாடி அருகே ரூ.18.70 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப பள்ளி கட்டிடத்தை இன்று முன்னாள் அமைச்சர் சீனிவாசன் திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சென்னையில் மத்திய மந்திரி அமித்ஷா பா.ஜ.க. நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, தொண்டர்களை உற்சாகமாக கட்சிப்பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க வேண்டும் என பேசி உள்ளார்.

    ஆனால் அ.தி.மு.க.வை பொறுத்தவரை புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

    அந்த கூட்டணிக்கு இந்தியாவில் பா.ஜ.க. தலைமை வகிக்கிறது. ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி. இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேசி இறுதி முடிவு எடுக்க கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். அதுவரை எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாளை மாலை அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடக்கிறது.
    • ஆலோசனைகள் முடிந்த பிறகே அ.தி.மு.க. கூட்டணியில் யார் களம் இறங்குவார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.

    தேர்தல் தேதி திடீரென்று அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி விட்டன.

    அ.தி.மு.க. கட்சிக்குள் சட்ட ரீதியாக சிக்கல் முடிவுக்கு வராத நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதும் அந்த கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. த.மா.கா. சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.

    அவர் காங்கிரஸ் வேட்பாளரை விட சுமார் 9 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடலாமா? வேண்டாமா? என்று இருவிதமான எண்ணத்தில் தவிக்கிறது.

    அ.தி.மு.க. போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் வரும். இரட்டை இலை சின்னத்தை பெற எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கையெழுத்து போட வேண்டும்.

    அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தயாரில்லை. அவர் தனியாக வருகிற 23-ந்தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    எனவே கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    த.மா.கா.விலும் போட்டியிட தயக்கம் உள்ளது. கடந்த தேர்தலில் த.மா.கா. வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பது சிக்கலாகி உள்ளது.

    சின்னம் கிடைக்காத பட்சத்தில் த.மா.கா.வின் சின்னங்களான ஆட்டோ அல்லது தென்னந்தோப்பு சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். அது இந்த குறுகிய காலத்தில் மக்களிடம் பிரபலமடையுமா? என்ற சந்தேகம் உள்ளது. அது மட்டுமல்ல இடைத்தேர்தலில் போட்டியிட அதிகமான பணச்செலவாகும்.

    பொதுத்தேர்தல்களில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் போட்டி போட்டு பணத்தை தண்ணீராக செலவு செய்வார்கள். ஆனால் இடைத்தேர்தலில் போட்டி அந்த அளவுக்கு இருக்காது என்பதால் பணம் செலவழிப்பது சாத்தியமில்லை. இப்படிப்பட்ட சூழலில் எப்படி தேர்தலை சந்திக்க முடியும்? என்றுதான் தயங்குகிறார்கள்.

    இந்த நிலையில் இது பற்றி ஆலோசிப்பதற்காக டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, கோகுலஇந்திரா, பெஞ்சமின் ஆகிய அ.தி.மு.க. நால்வர் குழு இன்று காலை 11 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்கள்.

    அப்போது இருதரப்பிலும் தங்கள் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் பற்றி விளக்கமாக விவாதித்ததாக கூறப்படுகிறது. ஜி.கே.வாசன் தெரிவித்த கருத்துக்கள் அ.தி.மு.க. தலைமைக்கு சொல்லப்படும். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.

    சந்திப்பு முடிந்ததும் தலைவர்கள் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜி.கே.வாசன் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினேன். நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் நாங்கள் இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டோம்.

    இன்று அ.தி.மு.க. தலைவர்கள் எங்கள் அலுவலகத்துக்கு வந்ததை வரவேற்கிறோம். இன்றைய அரசியல் சூழலை கவனத்தில் கொண்டு எங்கள் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியது எங்கள் கடமை. அதற்கான வியூகங்களை வகுப்பது பற்றி இரு தரப்பினரும் ஆலோசித்தோம்.

    எங்கள் இலக்கு கூட்டணி உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்பதுதான். தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக, மக்கள் செல்வாக்கை இழந்த அரசாக மாறிவிட்டது. எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஆட்சியின் மீது அவநம்பிக்கை அதிகரித்துள்ளது.

    இவையெல்லாம் ஆட்சிக்கு எதிரான எதிர்மறை உணர்வுகளையே அதிகரிக்க வைத்துள்ளது. இது எங்களுக்கு சாதகமாக இருக்கும். கூட்டணி கட்சிகள் கூடிப்பேசி எந்த கட்சி போட்டியிடுவது? வேட்பாளர் யார்? என்ற விபரங்கள் அடுத்த ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இப்படி இரு கட்சிகளும் தயங்குவதை காரணம் காட்டி கூட்டணியில் இருக்கும் பா.ஜனதா போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட தயாராகி வருகிறது.

    இதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி விட்டன. முதற்கட்டமாக 14 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தா, சரஸ்வதி எம்.எல்.ஏ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி, கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிர மணியன், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில், மாவட்ட பொதுச்செயலாளர் விநாயகமூர்த்தி, வேல் பாண்டியன் உள்ளிட்ட 14 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்.

    பா.ஜனதா களம் இறங்கி பலத்தை காட்ட வேண்டும் என்ற எண்ணமும் கட்சியினரிடையே உள்ளது. டெல்லி சென்றுள்ள பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று இரவு சென்னை திரும்புகிறார். நாளை இது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை காளிங்கராயன் பாளையத்தில் காளிங்கராயன் நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்த அ.தி.மு.க.வின் செங்கோட்டையன், த.மா.கா.வின் விடியல் சேகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்றனர். அப்போது தேர்தல் தொடர்பாக அவர்கள் தனியாக சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

    நாளை (21-ந்தேதி) மாலை அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடக்கிறது. இந்த ஆலோசனைகள் முடிந்த பிறகே அ.தி.மு.க. கூட்டணியில் யார் களம் இறங்குவார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

    ×